தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி-ரயிலைக் கவிழ்க்க நடந்த சதி
அரக்கோணம்: சென்னை அருகே தண்டவாளத்தில் ஜல்லிகளைக் கொட்டி வைத்திருந்தனர் சில விஷமிகள். அதன் மீது ஏறிய பாசஞ்சர் ரயில் அதிர்ஷ்டவசமாக தப்பித்தது.
ஆந்திர மாநிலம் நந்தலூரில் இருந்து பாசஞ்சர் ரயில் நேற்று இரவு அரக்கோணத்துக்கு வந்து கொண்டு இருந்தது. திருத்தணி- அரக்கோணத்திற்கு இடையில் இச்சிபுத்தூர் ரயில் நிலையம் அருகே இரவு 8.45 மணியளவில் வந்த போது என்ஜின் முன் பகுதியில் திடீர் என்று சடசடவென சத்தம் கேட்டது.
இதைக் கேட்டதும் டிரைவர் பீதியடைந்தார். ஆனால் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததால் உடனடியாக நிறுத்த முடியவில்லை. பிரேக் போட்டு ஒரு கிலோமீட்டர் தூரம் போய்தான் ரயில் நின்றது.
பின்னர் போலீஸாருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் போனது. இதையடுத்து அனைவரும் விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் பார்த்தபோது ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டிருந்ததைப் பார்த்தனர்.
அந்தக் கற்கள் மீது ரயில்ஏறியதால்தான் சத்தம் கேட்டிருக்கிறது. பின்னர் ஜல்லிகளை அகற்றிய பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதற்கிடையே, திருத்தணி- அரக்கோணம் மார்க்கத்தில் இன்று காலை மின்கம்பி இணைப்பு பழுதானதால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து திருத்தணி, அரக்கோணம் வழியாக செல்லும் 2 மின்சார ரயில்கள் திருப்பதி, பாண்டிச்சேரி பாசஞ்சர் ரெயில்கள் எதிர்திசையில் இயக்கப்பட்டது. மின் விநியோகம் சரியான பின்னர் ரயில்கள் வழக்கம் போல சென்றன.