ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை: கவலையில் தொழிலாளர்கள், மக்கள்

வெள்ளியின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.27,000 ஆக இருந்தது. ஆனால் கடந்த வாரம் சற்று விலை உயர்ந்து கிலோ ரூ.28,400-க்கு விற்கப்பட்டது. நேற்று காலை இது வரை வரலாறு காணாத அளவிற்கு கிலோ ரூ. 30,800-ஆக உயர்ந்தது.
வெள்ளியின் விலை உயரந்து கொண்டே போவது போல் முறைகேடுகள் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக முதலாளிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தின் பிரதானத் தொழிலாக வெள்ளிப்பட்டறை தொழில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் 10,000 வெள்ளிப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 50,000-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.
இது மட்டுமின்றி வெள்ளிப்பட்டறைகளைச் சார்ந்த தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடிபட்டுள்ளனர். வெள்ளியையே நம்பித் தொழில் செய்யும் இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று செவ்வாய்ப்பேட்டை வெள்ளி மார்க்கெட்டில் பலர் தங்களிடம் உள்ள வெள்ளியை விற்கத் தான் முயன்றனரே தவிர வாங்க ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை.
இது குறித்து செவ்வாய்ப்பேட்டை வெள்ளி கைவினைப்பொருள் சங்கச் செயலர் ஏ.ஜி.ரவி கூறியதாவது,
தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து சேலத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியை வாங்க முதலாளிகள் யாரும் முன்வரவில்லை. இந்த விலை உயர்வால் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் தொழில் பெரிதும் பாதிக்கப்டும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கொலுசுகளை விற்க வெளியூர்களுக்குச் சென்றவர்கள் அதிக விலை கொடுத்து யாரும் வாங்காததால் கவலையுடன் ஊர் திரும்புகின்றனர்.
தங்கமும், வெள்ளியும் ஆன்லைன் வர்த்தகத்தில் முக்கியமான பொருட்களாக உள்ளது. இதனால் சிலர் வேண்டுமென்றே தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயரச் செய்கின்றனர். அவர்கள் செய்யும் தந்திரத்தால் பாதிக்கபட்டிருப்பது ஏழைத் தொழிலாளர்கள் தான்.
ஏற்கெனவே உள்ள தட்டுபாடுகளால் வெள்ளிப்பட்டறைத் தொழில் நலிவடைந்துக் கொண்டிருக்கிறது.
தற்போது முகூர்த்த சீசன். இப்பொழுது தான் கொலுசுகள் அதிக அளவில் விற்பனையாகும். இந்த நேரத்தில் விலை உயர்ந்துள்ளது தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
வெள்ளிக்கு இளைக்காமல் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.128 அதிகரித்து, ரூ.14,280-ஆக உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் தான் தங்கத்தின் விலை முதன்முதலாக ரூ. 14,ஆயிரத்தை தாண்டியது. ஆனி, ஆடி மாதங்களில் சுபகாரியங்கள் நடத்தக்கூடாது என்பது ஐதீகம். அதனால் அந்த 2 மாதங்களில் தங்க விற்பனை குறைந்தது. தற்போது திருமண சீசன் கலைகட்டியுள்ளதால் தங்க விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து தங்கத்தின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி தஙகத்தின் விலை மறுபடியும் ரூ. 14, ஆயிரத்தை தாண்டியது. கடந்த வருடம் இதே நாளில் இருந்த தங்க விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பவுன் ரூ. 3,286 அதிகரி்த்துள்ளது.
நேற்று முன்தினம் ரூ.14 ஆயிரத்து 152 -ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ. 128 அதிகரித்து பவுன் ரூ.14 ஆயிரத்து 280-ஆக விற்றது.
இன்று காலை தங்கம் விலையில் லேசான குறைவு காணப்பட்டது. இருப்பினும் இது நிலையற்றது என்பதால் மக்களின் கவலையில் சற்றும் குறைவில்லை.
பண்டிகை காலமும், திருமண சீசனும் ஒன்றாக வந்துள்ளதால் மக்கள் அதிகளவில் தங்கம் வாங்குகின்றனர். இதனால் தங்கதத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
உலகிலேயே அதிகமாக தங்க ஆபரணங்களை விரும்பி அணிபவர்கள் இந்தியர்கள் தான். தங்கமின்றி சுபகாரியங்கள் இல்லை. இவ்வாறு அதிகரிக்கும் தங்க விலையை பார்த்து நடுத்தர வர்க்கத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தங்க விலை இப்படியே உயர்ந்து கொண்டே இருந்தால் சாமான்ய மக்களால் தங்க ஆபரணங்களே அணிய முடியாத நிலை உருவாகும் போல் இருக்கிறது.












Click it and Unblock the Notifications