முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் விமான பாகங்கள்!
முல்லைத்தீவு: தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய போர் விமானங்களின் உதிரி பாகங்கள் பலவற்றை நேற்று இலங்கை ராணுவம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுத்தது.இலங்கை விமானப் படையினர் வசம் சிக்கிய இந்த பாகங்கள் பெரும்பாலும் எரியூட்டப்பட்ட நிலையில் இருந்தன.
வான் புலிகள் என்ற விமானப் படையை உருவாக்கிய விடுதலைப் புலிகள் அமைப்பு, வெளிநாடுகளில் விமானங்களை வாங்கி, அவற்றை தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டதாகத் திகழ்ந்தது.
லேசு ரக விமானங்களை தாங்களே வடிவமைக்கும் திறனையும் பெற்றிருந்தனர் புலிகள்.
இறுதி யுத்தத்தில் புலிகள் தோல்வியைத் தழுவும் நிலையில் இருந்த போதும், அவர்களிடம் இரு விமானங்கள் இருந்ததாக இலங்கை ராணுவம் தெரிவித்தது. ஆனால் புலிகள் 'ஆயுதங்களை மௌனித்த'போது அந்த விமானங்கள் எங்கே போயினவென்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் விமானத்தின் உதிரி பாகங்கள் மற்றும் விமானம் கட்டுவது எப்படி என்பது குறித்து பொறியியல் புத்தகங்களை ராணுவம் கைப்பற்றியது.
அதன் பிறகு இப்போதுதான் மீண்டும் சில உதிரி பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை பெரும்பாலும் எரிந்த நிலையில் இருந்தன. பெரிய கண்டெய்னர்களில் இவை இருந்ததாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இறுதிப் போரின் போது தங்களிடம் இருந்த விமானங்களை பிரித்து புலிகள் அழித்திருக்கலாம். அதன் பாகங்கள்தான் இவை என இலங்கை ராணுவம் விளக்கம் கூறியுள்ளது.