21 நாள் ஸ்டிரைக் முடிந்தது: விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு கிளம்பல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 21 நாட்களாக நீடித்த மீனவர்கள் வேலைநிறுத்தம் அமைச்சர் கீதா ஜூவன் முன்னிலையில் பேச்சுவார்தை நடத்தப்பட்டதை அடுத்து முடிவுக்கு வந்தது. இன்று முதல் மீன்பிடிக்கச் செல்ல இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் லாப பங்குத் தொகையை 35 சதவிகிதத்தில் இருந்து 45 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பிரகாஷ், மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, மீன்துறை இணை இயக்குனர் ரெங்கராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதில் விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர் லாப பங்குத் தொகையை 35 சதவிகிதத்தில் இருந்து 39 சதவிகிதமாக உயர்த்தி வழங்கவும், வட்ட விகிதத்தை 10 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதமாகக் குறைத்து கொள்ளவும் ஒத்துக் கொண்டனர். இதனையடுத்து இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கடந்த 21 நாட்களாக நடந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications