6 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கும் 'மெகா ஸ்ட்ரைக்'!
டெல்லி: விலைவாசிப் பிரச்சினை, தொழிலாளர் விதிகள் மீறல், பொது நிறுவனங்களில் அன்னிய முதலீடு போன்ற பிரச்சினைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் 8 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 6 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கும் மெகா வேலை நிறுத்தம் செப்டம்பர் 7-ம் தேதி நடக்கிறது.
வங்கித்துறை, நிலக்கரி, மின்சக்தி, இன்சூரன்ஸ், தொலை தொடர்பு, துறைமுகம், ரோடு போக்குவரத்து, பெட்ரோலியம், கட்டிடத்துறை ஆகியவற்றை சேர்ந்த 6 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு, எச்.எம்.எஸ் உள்பட 8 மத்திய தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ரெயில்வே ஊழியர்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தப் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தொழிற்சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது. இச் சங்கத்தின் தலைவர் ஜி. சஞ்சீவ ரெட்டி எம்.பி. கூறுகையில்,"தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறோம்" என்றார்.