கல்வியின்மை நீங்கட்டும்! ஆசிரியர் வாழ்வு சிறக்கட்டும்!-ஜெ

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வை யகம்" என்பதற்கு எடுத்துக்காட்டாக கல்விக்கண் திறக்கும் அரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
“மனிதனாகப் பிறத்தல் அரிது; அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது" என்பர்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வியை போதித்து மாணவ- மாணவியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியர்கள்! இளைய சமுதாயத்தினரை நல்லவர்களாகவும், வல்ல வர்களாகவும், புகழ் மிக்க வர்களாகவும் ஆக்கும் சக்தி படைத்தவர்கள் ஆசிரியர்கள்! சமூக சேவை செய்வதற்குச் சிறந்த வழி ஆசிரியர் பணி என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏழை, எளிய மாணவ- மாணவியர் கல்வி பயில தடையாக இருப்பது வறுமை என்பதை உணர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, குடியிருப்புகளுக்கு அருகிலேயே பள்ளிகள், இலவச பாடப்புத்தகங்கள், மேல் நிலைப் பள்ளி பயிலும் மாணவ- மாணவியருக்கு இலவச மிதிவண்டி, பெற்றோரை இழந்த மாணவ- மாணவியருக்கு வைப்பு நிதி என பல்வேறு பயன்மிகு திட்டங்கள் எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
தலைசிறந்த தத்துவ ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளாகிய நன்னாளில், கல்வியின்மை நீங்கட்டும்!. ஆசிரியர் வாழ்வு சிறக்கட்டும்! என்று தெரிவித்து, எனது அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications