காவிரிப் பிரச்சினைக்கு கடவுள்தான் தீர்வு காண வேண்டும்-எதியூரப்பா பேச்சு

தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு இன்று காலை வந்து தரிசனம் செய்தார் எதியூர்பபா. இதற்காக நேற்றே அவர் தஞ்சை வந்து சங்கம் ஹோட்டலில் தங்கினார்.
காலையில் பலத்த பாதுகாப்புடன் வலங்கைமான் வந்து மாரியம்மனை தரிசித்த அவர் பின்னர் திருநாகேஸ்வரம் சென்று ராகு கோவிலில் வழிபட்டார். சிறப்பு பூஜைகளையும் செய்தார்.
இதைத் தொடர்ந்து ஐய்யாவாடியில் உள்ள காளி கோவிலுக்குச் சென்ற எதியூரப்பா அங்கும் பூஜையில் பங்கேற்றார்.
பின்னர் வெளியில் வந்த எதியூரப்பாவிடம் செய்தியாளர்கள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப் படி கர்நாடகம் தண்ணீர் தருமா என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த எதியூரப்பா, இரண்டு மாநிலத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் தண்ணீர் கிடைப்பது என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது.
நேற்று கூட முதல்வர் கருணாநிதியிடம் இதுகுறித்துப் பேசியுள்ளோம் என்றார்.
நிரந்தரத் தீர்வு எப்போதுதான் வரும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கடவுள்தான் அந்தத் தீர்வைக் கூற வேண்டும் என்றார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications