ராம நதி கால்வாய் திட்டம்-கிடப்பில் போட்ட திமுக: வைகோ
சென்னை: அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட ராம நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் ராம நதி நீர்த் தேக்கம் அமைந்துள்ளது. அதற்கு அடுத்த கணவாயில் பெரும்பத்து கிராமத்தில் ஜம்பு நதி உற்பத்தியாகிறது.
இந்த நதியில் அமைந்துள்ள மூன்று அணைக்கட்டுகள் மூலம் 600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ராம நதியில் 147 மில்லியன் கன அடி நீர் உபரியாக உள்ளது. ஆனால், ஜம்பு நதியில் கிடைக்கும் நீர், அதன் முதல் அணைக்கட்டான குத்தாலப்பேரி அணைக்கட்டுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
எனவே, ராம நதி நீர்த் தேக்கத்தின் உபரி நீரை, ஜம்பு நதியின் 2வது அணைக்கட்டான நாரணப்பேரி அணைக்கட்டுக்கு புதிய கால்வாய் மூலம் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2009-10ம் ஆண்டின் படி அதற்கான திட்ட மதிப்பு | 6.59 கோடியாகும். இத்திட்டத்தினால் எந்தப் பகுதிக்கும் பாதிப்பு இல்லை. உபரி நீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டுச் செல்லும் நல்ல திட்டமாகும். இதன் மூலம் 189 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி ராம நதி, மேல்மட்டக் கால்வாய் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications