சோராபுதீன் வழக்கு: விசாரணையைத் திரும்பப் பெற அமித் ஷா கோரிக்கை
டெல்லி: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் சிபிஐ விசாரணையை திரும்பப் பெற உத்தரவிடக் கோரி முன்னாள் உள்துறை அமைச்சரும், சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவருமான அமித் ஷா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஷா தாக்கல் செய்துள்ள மனு:
சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று கடந்த ஜனவரி மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையிட்ட நீதிபதிகள் குழுவில் நீதிபதி தருண் சாட்டர்ஜியும் இடம் பெற்றிருந்தார்.
இவர் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். எனவே அவர் மீது நம்பகத்தன்மை இல்லை. இதனால் சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று அவர் அளித்த தீர்ப்பைத் திரும்பப்பெற வேண்டும்.
இது தவிர குஜராத் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில்தான் இந்த வழக்கு தொடரப்படுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குஜராத் அரசியல்வாதிகள் பெயரைக் கூறுமாறு போலீஸ் அதிகாரி கீதா ஜோஹ்ரியை சிபிஐ வற்புறுத்தியிருப்பதே அதற்கு சாட்சியாகும்.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஆந்திர மாநில போலீஸ் அதிகாரிகளிடம் இந்த என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளவில்லை. இதிலும் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றும் ஷா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications