காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது-ஈவிகேஎஸ் இளங்கோவன்

இளங்கோவன் தொடர்ந்து தங்களை சாடி வந்ததால் கோபமடைந்த திமுக, காங்கிரஸுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து திமுக, திமுக ஆட்சி, முதல்வர் கருணாநிதி ஆகியோரை விமர்சிப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் தடை போட்டது.
இருப்பினும் வேறு மார்க்கமாக தொடர்ந்து பேசி வருகிறார் இளங்கோவன். சென்னை, மாதவரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஜி.கே. மூப்பனார் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் செங்குன்றத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசுகையில், 4-வது முறையாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது எதை காட்டுகிறது என்றால் இந்திய மக்களுக்காக உழைக்கும் அவரது தன்னலமற்ற தொண்டை காட்டுகிறது.
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும் என்றால் இளைஞர் காங்கிரசார் பாடுபட வேண்டும். அதனால்தான் ராகுல்காந்தி இளைஞர்களை நம்பி களத்தில் இறங்கி உள்ளார். தமிழ் நாட்டில் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது என்றார் அவர்.
இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications