ஆசிரியரைக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை, ரூ. 1000 அபராதம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு ஆசிரியரைக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு புத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். அரசு பள்ளி ஆசிரியர். இவரது சகோதரிகள் ராஜம்மாள், சரோஜினி ஆகியோர் மூவோட்டுகோணம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
சரோஜினியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சாலமன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. பக்கத்து வீடு என்பதால் கேவலமாக உள்ளது என சரோஜனி தனது சகோதரர் தங்கராஜிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக தங்கராஜ் சாலமனைத் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 20.2.92 அன்று இரவு தங்கராஜ், அவரது சகோதரி ராஜம்மாள் இருவரும் கண்ணுமூடு சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சாலமன் அரிவாளால் தங்கராஜை வெட்டினார். தடுத்த ராஜம்மாளுக்கும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் சிகி்ச்சைக்கு பிறகு குணமடைந்தனர்.
களியக்காவிளை போலீசார் சாலமன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் வழக்கு பளுகல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த குழித்துறை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது, சாலமனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.












Click it and Unblock the Notifications