உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ரோசய்யாவை நீக்க காங். முடிவு
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ரோசய்யா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதில் புதிய முதல்வரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மறைந்த ராஜசேகர ரெட்டி அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இடம் பெற்றிருந்தவர் ரோசய்யா. ரெட்டி மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்குவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இடைக்கால முதல்வராக ரோசய்யா அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த ரெட்டி ஆதரவாளர்கள் ரோசய்யாவுக்கு எதிராக திரும்பினர். ரெட்டி ஆதரவு அமைச்சர்கள் ரோசய்யாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருந்து ரோசய்யாவை முதல்வர் பதவியில் நீடிக்க விட்டது.
இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி தரும் வேலைகளில் குதித்தார். இரங்கல் யாத்திரை என்ற பெயரில் கட்சி கட்டுப்பாட்டை மீறி ஊர்ஊராகப் போய் வருகிறார்.
இந்த நிலையில் ரோசய்யாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்துவருகிறார். இதையடுத்து ரோசய்யாவுக்கு ஓய்வு கொடுக்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் பதவியைப் பிடிக்க அங்கு அடிதடி ஆரம்பித்துள்ளது.
முன்பு ரெட்டி ஆதரவாள்களை அமைதிப்படுத்தும் வகையில் கீதா ரெட்டி துணை முதல்வராக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது கீதா ரெட்டி முதல் பதவிக்கு மோத ஆரம்பித்துள்ளார். அதேபோல சபாநாயகர் கிரன் குமார் ரெட்டி, மூத்த அமைச்சர்கள் சிலரும் பதவிக்கு அடிதடியில் குதித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டிக்கும் முதல்வர் பதவியில் ஒரு கண் உள்ளது. எப்படியும் ஏதாவது ஒரு ரெட்டிதான் அடுத்த முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சோனியா காந்தியும் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications