சோபன்பாபு சொன்னாரா ஜெ. நல்ல சக்தி என்று? ராசா கேள்வி!
திருச்சி: சோபன்பாபுவோடு என்னுடைய வாழ்க்கை நிதானமாக போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னாரே ஜெயலலிதா. அந்த சோபன்பாபு ஜெயலலிதாவை நல்ல சக்தி என்று எப்போதாவது ஒப்புக் கொண்டாரா என்று கேட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராசா.
திருச்சி திமுக கூட்டத்தில் ராசா பேசியதாவது...
திருச்சி திமுக வரலாற்றிலும், முதல்வர் கருணாநிதியின் அரசியல் பயணத்திலும் எப்படி முருகனுக்கு படை வீடு ஆறு என்று சொல்லுவார்களோ, அப்படிப்பட்ட படை வீடுகளில் முதன்மையானதும், முக்கியமானதுமாக திகழ்வது திருச்சி.
கம்யூனிஸ தலைவர்கள் இன்று இருக்கிறார்கள் ஜெயலலிதாவோடு, நான் ஜெயலலிதாவுக்கும் சொல்லுகிறேன். அந்த அணிக்கும் சேர்த்து சொல்லுகிறேன். மார்க்சியம் என்றால் பொதுவுடமை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், கல்வி, சுகாதாரம், முதுமையில் பாதுகாப்பு ஆகியவற்றை தந்திருக்கிற முதல்வர் இந்தியாவிலேயே தலைவர் கலைஞர்தான். கம்யூனிஸவாதிகளே மறுக்க முடியாது.
இவரைப் பார்த்து ஜெயலலிதா சொல்லுகிறார் இனிமேல் தீய சக்தி என்று அழைப்போம் என்று. நான் ஜெயலலிதாவுக்கு மிகுந்த அடக்கத்தோடும், மரியாதையோடும் சொல்லிக் கொள்கிறேன். உன்னுடைய தனி மனித வாழ்க்கையை எப்போதும் நான் விமர்சிக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. அதற்கு எனக்கு வயதும் போதாது. அதற்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றை சொல்லுகிறேன். உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தித்தவர்கள். நீங்களே ஒப்புக் கொண்டீர்களே என்னுடைய வாழ்க்கை நிதானமாக போய்க்கொண்டிருக்கிறது சோபன்பாபுவோடு என்று. பேட்டி கொடுத்திருக்கிறீர்களே. அந்த சோபன்பாபு உங்களை நல்ல சக்தி என்று எப்போதாவது ஒப்புக்கொண்டது உண்டா?
எம்ஜிஆர் உங்களை அரசியலில் அடையாளப் படுத்தினாரே? அவர் நோய் வாய்ப்பட்டிருந்தபோது, நோய் வாய்ப்பட்டு மீண்டும் திரும்பியபோது, ராஜீவ்காந்திக்கு செய்தி அனுப்பி, அவரால் முடியாது. இயக்க முடியாத முதலமைச்சர். என்னை முதலமைச்சராக ஆக்குங்கள் என்று தூது விட்டீர்களே அப்போது எம்ஜிஆர் உங்களை நல்ல சக்தி என்று சொன்னாரா? தீய சக்தி என்று சொன்னாரா? உங்களால் சொல்ல முடியுமா?
வாஜ்பாய் ஒரு மகத்தான இந்திய நாட்டின் தலைவர். கொள்கைகளில் மாறுபாடு இருக்கலாம். அவர் சென்னைக்கு வந்து என்ன சொன்னார். என் வாழ்நாளில் நான் பட்ட அவமானம். தூங்க முடியாத நாட்கள், விழித்திருந்து விழித்திருந்து என் விழிகள் நனைந்த நாட்கள் ஜெயலலிதாவால்தான் வந்தது. வேறு யாராலும் வரவில்லை என்று அந்த மகத்தான மனிதர் சொன்னார். அவர் சொன்னாரா உங்களை நல்ல சக்தி என்று என்றார் ராசா.