வெளிநாட்டில் தீவிரவாதிகளைச் சந்தித்த ஐஜியிடம் விசாரணை: விரைவில் அறிக்கை தாக்கல்
திருவனந்தபுரம்: வெளிநாட்டுக்குச் சென்றபோது தீவிரவாதிகளைச் சந்தித்துப் பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேரள காவல்துறை ஐ.ஜி.யிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
கேரளாவில் கண்ணூர் சரக ஐ.ஜி.யாக இருந்தவர் டோமின் தச்சங்கரி. சில மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதியின்றி கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அந்த பயணத்தின்போது கேரளாவில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த சிலரை கத்தாரில் அவர் சந்தித்து பேசியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அந்த நாட்டில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ள சிலரை இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் அவர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கத்தார் நாட்டு இந்திய தூதரக அதிகாரி தீபா மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால் தன் மீதான தீபாவின் புகாரை மறுத்தார் தச்சங்கரி. ஒரு மலையாளியாக இருந்து கொண்டு தீபா தன் மீது குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்றார் அவர். இதையடுத்து இந்த பிரச்சனை தீவிரமானது. இது பற்றி விசாரணை நடத்தும்படி தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு (என்ஐஏ) மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி சில தினங்களுக்கு முன்பு தச்சங்கரியை டெல்லிக்கு அழைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.