விஷக் கள் விற்ற மலப்புரம் மாவட்டத்தில் கள்ளுக் கடைகள் மூடல்-கேரள அரசு
திருவனந்தபுரம்: விஷக் கள்ளுக்கு பலர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கள்ளுக் கடைகளும் மூடப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இத்தகவலை அம்மாநில அமைச்சர் கருதாஸ் சிங் கூறியுள்ளார்.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குற்றிப்புறம், பேரசன்னூர், ஆலத்தியூர் புல்லூர், வண்டூர் உள்ளிட்ட மதுக்கடைகளில் விஷகள் குடித்த 27 பேர் பலியாகினர். இதுதொடர்பாக குற்றிபுரம், வண்டூர் ஆகிய இடங்களில் உள்ள 2 கள்ளுகடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதிக போதைக்காக மாத்திரைகள் கலந்தது கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த கள்ளு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
விஷ கள் விற்றது தொடர்பாக கள்ளுகடை உரிமையாளர் பட்டாம்பி, திரவியம், பாலன், உண்ணிகிருஷ்ணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ராம்தாஸ், உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மலப்புரம் மது ஒழிப்புபிரிவு துணை கமிஷனர் முகமது ரசீத், உதவி கமிஷனர்கள் ஜெயன், ரசீது ஆகிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பான அமைச்சரவைக் கூட்டமும் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் குருதாஸ் சிங் கூறுகையில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கள்ளுக் கடைகளும் மூடப்படும். சிறப்பு விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications