மைனர் மாணவி திருமணத்தை நிறுத்திய போலீஸ்: 3 ஆண்டுகள் கழித்து திருமணம்
நெல்லை: 18 வயது நிரம்பாத மைனர் மாணவியின் திருமணத்தை போலீசார் நிறுத்தினர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ராமையா பாண்டியன். ஓய்வு பெற்ற தலையாரி. இவரது மகள் சந்தன செல்வி. 10-ம் வகுப்பு படித்து வந்தாள். 6 மாதத்திற்கு முன் ராமையா பாண்டியன் இறந்து விட்டார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. இதைத் தொடர்ந்து சந்தன செல்வியை மாமன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி வெங்கராயன்புரத்தைச் சேர்ந்த நாராயணனின் மகன் அய்யப்பனுக்கும், சந்தன செல்விக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அய்யப்பன் சென்னையில் பாத்திரக் கடை வைத்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த 6-ம் தேதி நடப்பதாக இருந்தது.
இதற்கிடையே 18 வயது நிரம்பாமல் சந்தன செல்விக்கு திருமணம் செய்து வைக்கும் தகவல் போலீசுக்கு எட்டியது. திருமணத்துக்கு முதல் நாள் மணமகனையும், மணமகளையும் மற்றும் உறவினர்களையும் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சந்தன செல்விக்கு 15 வயது தான் ஆகிறது என்பது தெரிந்தது. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைப்பதாகவும், தற்போது நிச்சயம் மட்டும் செய்து கொள்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சந்தன செல்வி தொடர்ந்து பள்ளிக்குச் செல்கிறாள்.