சென்னையில் புது மாப்பிள்ளையை விரட்டி வெட்டிக் கொலை செய்த கும்பல்
சென்னை: சென்னையில் புது மாப்பிள்ளையை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் படுகொலை செய்தது. கொலையான நபரின் தம்பி ஒருவரை வெட்டியதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். இவருக்கு சமீபத்தில்தான் கல்யாணம் நடந்தது. மனைவி பெயர் பொன்வல்லி. பொன்வல்லியின் வீடு வியாசர்பாடியில் உள்ளது.
பொன்வல்லியின் தாயார் வீட்டில் கேஸ்சிலிண்டர் தீர்ந்து விட்டது. இதையடுத்து பொன்வல்லியின் அண்ணன் சண்முகம், தங்கை வீட்டில் இருந்த சிலிண்டரை எடுக்க வந்தார். பைக்கை முரளி கிருஷ்ணன் ஓட்ட, மைத்துனர் சண்முகம் பின்னால் சிலிண்டருடன் அமர்ந்து கொண்டார்.
பின்னர் வண்டி சென்றபோது திடீரென எட்டு பேர் கொண்ட கும்பல் அவர்களை மடக்கியது. பயந்து போன சண்முகம், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ஆனால் முரளிகிருஷ்ணன் மாட்டிக் கொண்டார்.
அவரை அந்தக் கும்பர் சரமாரியாக வெட்டியது. தப்பி ஓட முயன்றும் அவரால் முடியவில்லை. தனது வீட்டு வாசல்வரை ஓடி வந்து விழுந்து விட்டார். சத்தம் கேட்டு முரளிகிருஷ்ணனின் தந்தை சிட்டிபாபு, தாயார் அலமேலு ஆகியோர் ஓடி வந்த போது, தங்களது மகன் வெட்டப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
ஆனாலும் கொலைக் கும்பல் மிகவும் சாவகாசமாக வெட்டி விட்டு முரளிகிருஷ்ணன் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்ட பின்னரே அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
சில மாதங்களுக்கு முன்பு, முரளிகிருஷ்ணனின் தம்பி கோபி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த டொமினிக் என்பவரை வெட்டித் தள்ளினார். இதற்குப் பழிவாங்கும் வகையில், முரளிகிருஷ்ணனை தீர்த்துக் கட்டியுள்ளது டொமினிக்கின் ஆதரவுக் கும்பல்.












Click it and Unblock the Notifications