கடையநல்லூர் பகுதியில் தக்காளி விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
கடையநல்லூர்: கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதோடு, கட்டுப்படியாகும் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் சுற்று பகுதிகளில் நெல் பயிரிடுவதோடு திராட்சை போன்ற பழவகைகளும், தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறி வகைகளும் பயிரிடப்படுகிறது.
குறிப்பாக இங்கு விளையும் தக்காளிக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கிராக்கி உள்ளதால் ஆண்டுதோறும் கடையநல்லூர் பகுதியில் தக்காளி பயிரிடப்படுவது அதிகரித்து வருகிறது.
கடையநல்லூர் வட்டாரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. தக்காளி விளைச்சலுக்கு சீதோஷ்னமான நிலை நிலவுவதால் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
அத்துடன் தக்காளிக்கு கட்டுபடியான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 20 கிலோ கொண்ட ஒரு கூடை தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடையநல்லூரில் தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டுமேன இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.