மும்பைக்குள் 2 தீவிரவாதிகள் ஊடுறுவல்-நகர் முழுவதும் உஷார் நிலை

நேற்று மும்பை காவல்துறை கூடுதல் ஆணையர் ஹிமன்ஷு ராய் அவசரமாக செய்தியாளர்களை அழைத்து இத்தகவல்களைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், இரண்டு வெளிநாட்டினர், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இறுவர் மும்பைக்குள் ஊடுறுவியுள்ளனர். இதையடுத்து மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இருவரும் எந்த நாட்டினர் என்பதை இப்போது சொல்வதற்கில்லை. அவர்களில் ஒருவரது பெயர் கலிமுதீன் கான் (28). இன்னொருவர் பெயர் ஹபீஜ் சரீப் (25).
நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட நபர்களை யாராவது எங்காவது பார்த்தால் அல்லது தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை உஷார்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் நாச வேலைகளில் ஈடுபடும் திட்டத்துடன் இருவரும் வந்துள்ளதாக தெரிகிறது என்றார்.
விநாயகர் சதுர்த்தி-ரம்ஜான் கொண்டாட்டம்:
மும்பையில் இன்றுதான் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. அதேபோல விநாயக சதுர்த்தியும் இன்றுதான் கொண்டாடப்படுகிறது. இதனால் இரு சமூகத்து மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் மும்பையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் அசோக் சவான் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் இரு நபர்கள் மும்பையில் ஊடுறுவியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து உள்துறையிலிருந்து எனக்குத் தகவல் அனுப்பியுள்ளனர். இருவரது புகைப்படங்களும் அனுப்பப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் முழு உஷார் நிலையில் உள்ளனர். பொதுமக்களும் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மாநகர் முழுவதும் போலீஸார் மிகக் கவனத்துடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் 43,000 போலீஸார்:
மும்பை முழுவதும் 43,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக லால்பங் பகுதியில் அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையங்களிலும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதி விரைவுப் படை, மகாராஷ்டிர அரசின் போர்ஸ்1 போலீஸ் படை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள்:
இரு தீவிரவாத நபர்கள் குறித்து பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் தெரிந்தால், 2263333/22625020 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மும்பையில் ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பத்து பேர் ஊடுறுவி நடத்திய கொலை வெறி தீவிரவாதத் தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications