சென்னையில் துணிகரம்-ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில், வங்கியில் பணியாற்றும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம், அவர்களின் உதவியின்றி இந்த துணிகர திருட்டு நடந்திருக்க முடியாது என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இயந்திரத்தைத் திறக்க பயன்படுத்தப்படும் ரகசிய குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி மிகக் கச்சிதமாக இயந்திரத்தை திறந்து பணத்தை எடுத்துள்ளதால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பெரிய அளவில் பணம் திருடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து அந்த ஏடிஎம் மையக் காவலாளியை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமரா பதிவையும் ஆய்ந்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள விநாயக நகர் ஏடிஎம் மையத்திற்கு வங்கி மேற்பார்வையாளர் தாமஸ் வந்தார். அப்போதுதான் அங்கு நடந்த திருட்டு தெரிய வந்தது. பணப் பெட்டி திறந்து கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்ட தாமஸ், தூங்கிக் கொண்டிருந்த பாதுகாவலரை எழுப்பினார்.
அவரிடம் திருட்டு குறித்து தெரிவித்தபோது காவலாளிக்கும் ஒன்றும் புரியவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் தாமஸ்.
இந்த திருட்டு குறித்து உதவி போலீஸ் ஆணையர் சக்திவேல் கூறுகையில், வங்கிப் பணியாளர்களுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரித்து வருகிறோம். ரகசியக் கேமராவில் இரண்டு முகமூடி அணிந்தி நபர்கள் பணத்தை எடுப்பது பதிவாகியுள்ளது. அவர்களை அடையாளம் காண முயன்று வருகிறோம் என்றார்












Click it and Unblock the Notifications