இந்தியர்களிடம் குவியப் போகும் கார்கள்
இந்தியாவில் தனி நபர் ஆண்டு வருமானம் அதிகரித்து வருவதாலும், பொருளாதார நிலை மேம்பட்டு வருவதாலும், 2014-15ம் ஆண்டு வாக்கில் கிட்டத்தட்ட 11.7 கோடி இந்தியர்களின் வீடுகளில் கார்கள் அலங்கரிக்கும் என கிரைஸிட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரைஸிட் ஆய்வு நிறுவன ஆபரேஷன்ஸ் இயக்குநர் நாகராஜன் நரசிம்மன் கூறுகையில்,
இந்தியர்களின் வருமானம் அதிகரித்து வருகிறது. கார் மார்க்கெட்டும் முன்பை விட கடும் போட்டியுடன் கூடியதாக உள்ளது.பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தான கார்களை இப்போது நடுத்தர வர்க்கத்தினரும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.
இதை வைத்துப் பார்க்கும்போது 2014-15ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் 11.7 கோடி இந்திய வீடுகளில் கார்கள் நிற்கும்.
இதன் மூலம் ஆட்டோமொபைல் விற்பனை விகிதம் 17 முதல் 19 சதவீதம் அதிகரிக்கும். மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி மதிப்புக்குரியதாக ஆட்டமொபைல் துறை மாறி விடும்.
அந்தக் காலகட்டத்தில் 1000 இந்தியர்களில் 17 பேரிடம் கார் இருக்கும். இருப்பினும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது இது மிக மிக மிக குறைவானதாகும். அங்கு 1000 பேருக்கு 660 பேர் கார் வைத்துள்ளனர். அமெரிக்காவில் 1000 பேருக்கு 440 பேரிடம் கார்கள் உள்ளன.
எனவே 19 சதவீத அளவுக்கு நமது கார்ச் சந்தை வளர்ந்தாலும் கூட கார்களின் தேவை மேலும் மேலும் அதிகமாகவே இருக்கும். எனவே கார் தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய சந்தையாக இந்தியா தொடர்ந்து விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார் நரசிம்மன்.