காங்கிரஸுக்கு 110 தொகுதிகளை ஒதுக்கியே ஆக வேண்டும்-இளங்கோவன்
ராமேஸ்வரம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு என் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரால் என்னை எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு என் மீது நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்திருத்த வேண்டும். பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் என தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உரிய அதிகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.
1980-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவியாக இந்திராகாந்தி இருந்தார். அப்போது தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 110 தொகுதிகளிலும், தி.மு.க. 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அந்த நிலை வருகிற தேர்தலில் தொடர வேண்டும் என விரும்புகிறோம்.
இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் ராமேசுவரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதன் கட்டமைப்பு வசதி களுக்காக ஏற்கனவே மத்திய அரசு ரூ.10.5 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் ரூ.11 கோடி மத்திய அரசு மூலம் ஒதுக்கப்படும்.
மத்திய அரசு வழங்கி வரும் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு தாங்களே செய்து வருவதாக தெரி விக்கிறது. இதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செய்வதாக கூறுவது ஏற்கக்கூடியது அல்ல.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை தடுக்க மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் ஆகியோர் விரைவில் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வழிபிறக்கும்.
தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்குமா என்று என்னிடம் கேட்டால், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே எனது பதில் என்றார் இளங்கோவன்.