தூத்துக்குடி அருகே 2 வயது குழந்தையை எரித்துக் கொன்று தாய் தற்கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் குடும்ப தகராறில் குழந்தையை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆழ்வார்திருநகரி பால்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவர் தந்தை கார்மேகராஜூவுடன் அங்குள்ள பஜாரில் மாளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சத்யாகலா. இவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒவியா என்ற 2 வயது மகள் உள்ளார். கார்மேகராஜூம், ராம்குமாரும் அதே தெருவில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று ராம்குமார் நெல்லையில் இருந்து வாங்கி வந்த பொருள் தொடர்பாக அவருக்கும், சத்யாகலாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக ராம்குமார் சென்றார். காலை 9 மணி அளவில் படுக்கையறைக்கு மண்எண்ணெய் கேனுடன் சென்ற சத்யகலா, ஒவியாவின் உடலில் மண்எண்ணெய் ஊற்றினார்.
பின்னர் தனது உடலிலும் ஊற்றி குழந்தை மீது தீக்குச்சியை உரசி போட்டார். சில வினாடிகளில் தானும் தீக்குளித்தார். உடலில் தீ வேகமாக பரவியதும் குழந்தை ஓவியா அங்கும் இங்கும் அலறி கொண்டே ஓடியது. ஆனாலும் அதற்குள் தீ உடல் முழுவதும் பரவி சிறிது நேரத்தில் கரிகட்டையாக இறந்தாள்.
குழந்தையின் அலறல் சத்தத்தையும், வீட்டுக்குள் கரும் புகை வருவதையும் கண்ட பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு குழந்தை ஓவியாவும், தாய் சத்யகலாவும் உடல் கருகி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ராம்குமார் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பட்டாணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். ராம்குமாருக்கும், கலாவுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் தூத்துக்குடி ஆர்டிஓ குருதேவியின் விசாரணையும் நடக்கிறது.
குழந்தையை கொன்று தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications