திமுக மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்- மு.க.ஸ்டாலின்
அரக்கோணத்தில் திமுக பிரமுகரின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையில்,
தேர்தல் நேரத்தில் கழகத்தின் வாக்குறுதிகள் வாய்ப்பேச்சாக சொல்லப்படாமல் புத்தகமாகவே அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தருகிறோம் என்று கூறப்பட்டபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதெல்லாம் நடக்காது. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தரமுடியாது. இது ஏமாற்றும் வாக்குறுதி என்றார்.
ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தமிழக முதல்வர் கருணாநிதி விழா மேடையிலேயே கோப்புகளை கொண்டுவர சொல்லி ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என கையெழுத்திட்டார். தற்போது ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, இந்தத் தேர்தலில் கருணாநிதியின் தேர்தல் வாக்குறுதிதான் தமிழகம் முழுவதற்குமான வேட்பாளர் என்றார்.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.
2006ம் ஆண்டு காஞ்சீபுரத்தில் உள்ள கரசங்கால் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கலர் டி.வி. முதல் முதலாக வழங்கப்பட்டது. இந்த டிசம்பர் 20ம் தேதிக்குள் அனைவருக்குமே கலர் டி.வி. வழங்கப்பட்டுவிடும்.
தேர்தலில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் வாழ்வில் வளம் பெற சொல்லப்படாத வாக்குறுதிகளையும் புதிய திட்டங்களாக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார்.
அவசர காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு செல்ல எண் 108 ஆம்புலன்ஸ் உதவி திட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமாக ஏராளமானவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 21 லட்சம் வீடுகள் இதன் மூலம் கட்டி தரப்படும். இந்த திட்டத்தை செய்து முடிக்க 6 ஆண்டு காலம் ஆகும்.
முதல்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் 30ம் தேதிக்குள் பயனாளிகளுக்கு இந்த வீடுகள் தரப்படும். மீதி உள்ள வீடுகள் வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
திமுக வரும் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும். தல்வர் கருணாநிதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று பாக்கி உள்ள வீடுகளையும் கட்டி தருவார். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சந்திக்க பயப்படாமல் நாங்கள் செல்வோம்.
ஏனென்றால் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், ஒவ்வொரு திட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பொதுமக்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
கருணாநிதி மீது தமிழக மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.