விடுவிக்கப்பட்ட புலிகள் மீண்டும் கைது!
கொழும்பு: வட இலங்கையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகள், ராணுவ புனர்வாழ்வு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வந்தனர்.
இவ்வாறு அரசாங்கத்தினால் மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டு வரும் முன்னாள் விடுதலைப் புலிகளில் பலர் மீண்டும் புலானாய்வு பிரிவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆண், பெண் முன்னாள் விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு, பருத்தித்துறை, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இந்த கைது சம்பவங்கள் நடந்துள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர்களைப்பற்றிய தகவல்களை பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் உள்ளனர். இலங்கை அரசின் இந்த நட வடிக்கையால், விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலிகளின் குடும்பத்தினரிடையே பதட்டமும் கவலையும் ஏற்பட்டுள்ளது.