2ஜி ஸ்பெக்ட்ரம்: மத்திய அரசு-ராசா-சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணையை கண்காணிக்க வேண்டும் அல்லது இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசும், ராசாவும் 10 நாட்களுக்குள் தங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் பெயர்களையே குறிப்பிடாமல் அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அவர்களது பெயர்களுடன் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றனர்.
ராசா, மத்திய அரசு தவிர சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.