குரான் எரிப்பு வதந்தி எதிரொலி-காஷ்மீரில் ஈரானின் பிரஸ் டிவிக்குத் தடை
டெல்லி: அமெரிக்காவில் திருக்குரான் கிழித்து எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டு, காஷ்மீரில் பெரும் வன்முறை மூளக் காரணமாக அமைந்த ஈரானின் பிரஸ் டிவிக்கு காஷ்மீரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய ஆங்கிலத் தொலைக்காட்சியான பிரஸ் டிவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் திருக்குரானை ஒருவர் தீவைத்து எரித்ததாக இது செய்தி வெளியிட்டது. ஆனால் இது வெறும் வதந்தி என்று அமெரிக்கா மறுத்துள்ளது.
ஆனால் இந்த செய்தியால், காஷ்மீரில் பெரும் வன்முறை மூண்டது. நேற்று ஒரே நாளில் கலவரத்திற்கு 18 பேர் பலியானார்கள்.
இதையடுத்து காஷ்மீரில் பிரஸ் டிவிக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு. இதுகுறித்த தகவலை ஜம்மு காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரஸ் டிவியை ஒளிபரப்பக் கூடாது என்று உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
இருப்பினும் பிரஸ் டிவியின் இணையதளத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை.