ப.சிதம்பரம் தலைமையில் காஷ்மீர் செல்லும் அனைத்து கட்சி குழு

அந்த மாநில நிலைமை பெரும் கவலைக்கிடமாகியுள்ள நிலையில் அதுகுறித்து விவாதிக்க இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்டனி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக தலவைர்கள் அத்வானி, நிதின் காட்காரி, சுஷ்மா ஸ்வராஜ், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பேசிய பல கட்சிகளின் பிரதிநிதிகளும் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு தரப்பட்டுள்ள சிறப்பு அதிகார சட்டத்தை தளர்த்த வேண்டும் என்று கோரின.
(இதற்கு ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது)
கூட்டத்தில் பேசிய பிரதமர், காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை ஒன்றே நிரந்தர வழி. வன்முறை சம்பவங்களில் இளைஞர்களும் , பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்வது வருத்தமளிக்கிறது.
அரசின் மீது அதிருப்தி இருந்தால், அதை நிர்வாகத்தின் மூலமே எடுத்துச் சொல்ல வேண்டும். பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமானால் அதற்கு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட யாருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார்.
இக் கூட்டத்தில் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டத்தை தளர்த்த வேண்டும் என்று காஷ்மீர் மாநில கட்சிகள் கோரின.
இதற்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனாலும் தற்போது காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வர ராணுவத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை பெருமளவில் விலக்கிக் கொள்ள வேண்டியது அவசியம் என மத்திய அரசு கருதுகிறது. இது குறித்து பின்னர் விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
அதே நேரத்தில் நிலைமையை நேரில் சென்று அறிய, உள்துறை அமைச்சர் தலைமையி்ல் அனைத்துக் கட்சி்க் குழுவை காஷ்மீருக்கு அனுப்ப இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு அத்வானி எச்சரிக்கை:
இதற்கிடையே காஷ்மீர் கலவரத்தை அடக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அத்வானி, என்ன செய்வது, என்ன முடிவு எடுப்பது என்றே அரசுக்குத் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீ்ரில் ஒரு அரசு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.
ஜம்முகாஷ்மீர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அபாயகரமானதாக உள்ளது. பிரிவினைவாதிகள் வலுப் பெற வழி வகுத்து விட்டார் முதல்வர் உமர் அப்துல்லா.
பிரிவினைவாதிகளுக்கு சரியான பதிலடி தருவதை விட்டு விட்டு பாதுகாப்புப் படையினரின் அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது மத்திய அரசு. பாதுகாப்புப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது மிகவும் அபாயகரமானது. அதேபோல படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அரசு முயலுகிறது.
அப்படி நடந்தால் அது பாகிஸ்தானுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அமையும் என்றார்.












Click it and Unblock the Notifications