இனி 2005-2006-ம் ஆண்டு விலை அடிப்படையில் பணவீக்கம் மதிப்பீடு!
டெல்லி: மொத்த கொள்முதல் விலை அடிப்படையிலான பணவீக்கத்தைக் கணக்கிட இனி 2005-2006 காலகட்டத்தை நிலை ஆண்டாகக் கொள்வதாக மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் பணவீக்கம் மொத்த கொள்முதல் விலையில் கணக்கிடப்படுகிறது. எந்த ஆண்டில் பெரும்பான்மை பொருள்களின் விலைகள் கட்டுக்குள் இருந்தனவோ, அந்த ஆண்டை நிலை ஆண்டாகக் கொண்டு (base year), நடப்பு ஆண்டின் விலை வீதம் தீர்மானிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே பணவீக்கத்தின் அளவு பற்றி அறிவித்து வந்தனர்.
இதுவரை 1993-94 -ம் ஆண்டின் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்பட்டு வந்தது.
1993-94-ம் ஆண்டின் விலைகளுக்கும், நடப்பு விலைகளுக்கும் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் உள்ள நிலையில், நாட்டின் பணவீக்கம் குறித்ததான சரியான மதிப்பீடுகள் தெரியாமல் இருந்தது.
எனவே நிலை ஆண்டை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தப் பொறுப்பு மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
பல்வேறு ஆண்டுகளில் நிலவிய விலைகளை ஆராய்ந்து பார்த்த பொருளியல் நிபுணர்கள், 2004-2005-ம் ஆண்டை நிலை ஆண்டாகத் தேர்வு செய்துள்ளனர். இதற்காக அந்த ஆண்டில் விற்கப்பட்ட 5482 பொருள்களின் விலை விவரங்களை ஆராய்ந்தது மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை.
தற்போது 435 பொருள்களின் விலைகளை மையமாக வைத்து பணவீக்க வீதத்தைத் தீர்மானிக்கிறோம். இனி 676 பொருள்களின் விலைகள் கணக்கில் கொள்ளப்படும்.
இதுபற்றிய விரிவான அறிவிக்கையை நாளை வெளியிடுகிறது மத்திய அரசு.
இந்த மாற்றத்தின் மூலம், முன்பை விட துல்லியமாக நாட்டின் பணவீக்கம் அதாவது விலைவாசி உயர்வைக் கணித்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications