இன்று முதல் தமிழகத்தில் ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவை மேற்கொள்ளலாம்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வருகிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் ஒரு மணி நேரத்தில் அதைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.
ஆண்டுதோறும் பத்தாவது, பிளஸ்டூ முடிப்போர், ஆசிரியர் பயிற்சி முடிப்போர், பட்டதாரிகள் என லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து வைக்க வருகின்றனர்.இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பதிவைப் புதுப்பிக்கவும் பெரும் கூட்டம் வருகிறது.
இதையடுத்து இந்த நிலையை சீர்படுத்தும் வகையில், கம்ப்யூட்டர்மயமாக்கும் பணிகள் தொடங்கின. ரூ. 5 கோடி அளவில் தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பகங்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது ஆன்லைனிலேயே பதிவு, பதிவு புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இன்று முற்பகல் 11 மணியளவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
11 மணிக்கு மேல் கீழ்க்கண்ட முகவரிக்குச் சென்று பதிவு புதுப்பித்தல், பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை இனி எங்கிருந்தபடியும் செய்யலாம்.
ஆன்லைன் மூலம் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கான இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in












Click it and Unblock the Notifications