கடையநல்லூரில் மாசுபட்ட குடிநீரைக் குடித்த 20 பேருக்கு வாந்தி மயக்கம்
கடையநல்லூர்: கடையநல்லூரில் திடீர் வாந்தி, மயக்கத்தினால் சிறுவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கற்பகவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சாந்தி, முப்புடாதி, கருப்பசாமி, செல்வராஜ், பட்டமுத்து, கல்யாணி, பேச்சிமுத்து, கார்த்தி, சாந்தி, கீதா உள்பட 20-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவில் நேற்று வழங்கப்பட்ட அன்னதான விழாவில் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் அடைந்ததாக பாதிக்கப்பட்டோர் கூறினர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாசு கலந்த குடிநீரைக் குடித்ததால் தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
தென்காசி ஆர்.டி.ஓ. சேதுராமன், தாசில்தார் பரமசிவன் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று கிருஷ்ணாபுரம் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.