போலீஸ், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 127 அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்
சென்னை: காவல்துறைமற்றும் தீயணைப்பு, ஊர்க்காவல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 127 பேருக்கு இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கம் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,சிறைத்துறை,ஊர்க்காவல் படைப்பிரிவு,காவல்துறை விரல்ரேகைப்பிரிவு ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் காவலர்களின் சிறந்த சேவைகளைப்பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறே, 2010ம் ஆண்டு அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ம் நாள் காவல் கண்காணிப்பாளர் முதல் காவலர் நிலை வரையில் 100 காவல்துறை அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் கோட்டத்தீயணைப்பு அதிகாரி முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையில் 10 அலுவலர்களுக்கும்,
சிறைத்துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல் நிலை சிறைக்காவலர் வரை 10 அலுவலர்களுக்கும் ஊர்க்காவல் படையில் படைத்தளபதி முதல் அணித்தளபதி நிலை வரையில் 5 பேருக்கும்,
காவல்துறை விரல்ரேகைப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு துணைக்காவல் கண்காணிப்பாளர்களுக்கும் ஆக மொத்தம் 127 பேருக்கு அவர்கள் பணியில் காட்டிய மிகச்சிறந்த கடமைப்பற்றுறுதியைப்பாராட்டும் முகத்தான், தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு பதக்க விதிகள் படி, பணிநிலையின் அடிப்படையில் முறையே 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய்,5 ஆயிரம் ரூபாய் ஒட்டு மொத்த மானியத்தொகையாக அளிக்கப்படும்.
இது தவிர, தீயணைப்புத்துறையில் 9 தீயணைப்போர்,காவல் துறையில் ஒரு துணைக்காவல் கண்காணிப்பாளர், ஒரு தலைமைக்காவலர் என இருவர் ஆக மொத்தம் 11 பேருக்கு அவர்கள் ஆற்றியுள்ள வீரதீரச்செயல்களைப்பாராட்டி இந்த ஆண்டிற்கான தமிழக முதலமைச்சரின் வீரதீரச்செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கிடவும், இப்பதக்கங்களைப்பெறும் அலுவலர்களுக்கு மாதம் தோறும் 300 ரூபாய் வீதம் பதக்கப்படியாக வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
2010க்கான தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அலுவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறவிருக்கும் விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பதக்கங்களை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.