தமிழகத்திலும், புதுவையிலும் இன்று மழை பெய்யலாம்
சென்னை: தமிழகத்திலும், புதுச்சேரியிலும், பல இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வளி மண்டல மேல் அடுக்குகளில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவானது.
திருக்கோவிலூரில் 12 சென்டி மீட்டரும், உளுந்தூர்பேட்டை, திருவாடனை, அரூர் ஆகிய இடங்களில் தலா 10 சென்டி மீட்டரும் மழை பெய்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.