கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக, ம.ஜ.தளம் தலா ஒரு இடத்தில் வெற்றி: காங்கிரசுக்கு 'முட்டை'
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் இரு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக ஒரு இடத்திலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 'முட்டை' கிடைத்துள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் கடூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் விஸ்வநாத் 13,000 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியை காங்கிரசிடமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.
குல்பர்கா தெற்கு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் அருணா பாட்டீல் சுமார் 3,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் சிங்கை வென்றார். இதன்மூலம் இந்தத் தொகுதியை பாஜகவிடமிருந்து மதசார்பற்ற ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது.
இந்தத் தொகுதியில் தோற்ற அஜய் சிங், முன்னாள் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தரம் சிங்கின் மகனாவார். இவர் இங்கு தோற்பது இது இரண்டாவது முறையாகும். கர்நாடகத்தை ஆண்ட மிக மட்டமான முதல்வர்களில் ஒருவர் என்ற 'பெருமையை'ப் பெற்றவர் தரம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதையடுத்து கர்நாடக சட்டசபையின் எதிர்க் கட்சித் தலைவர் பதவிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
அரசியல்ரீதியில் முடங்கிப் போயிருந்த தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு இந்த வெற்றி பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications