மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு மோதிரம்
சென்னை: சென்னையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து, அழகு தமிழில் பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு முதல்வர் கருணாநிதி தங்கம் மோதிரம் அணிவிப்பார் என்று சென்னை மேயர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தனியார் மருத்துவமனையைக் காட்டிலும் மாநகராட்சி மருத்துவமனை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று சிறப்பு திட்டமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 4 வேளை உணவு அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சாதாரண முறையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 3 நாட்களுக்கும், ஆபரேஷன் முறையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 5 நாட்களுக்கும் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இலவச பரிசுப்பை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான 15.9.2008 முதல் தொடங்கப்பட்டு, 35 ஆயிரம் குழந்தைகளுக்கு ரூ. 52 லட்சத்து 50 ஆயிரம் செலவில் பரிசுப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து தமிழ்ப்பெயர் சூட்டப் பெற்ற 750 குழந்தைகளுக்கு 3.6.2009 முதல் தங்கமோதிரம் ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதி விரைவில் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து, தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவார் என்றார்.












Click it and Unblock the Notifications