அதிகாரி மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராட்டம்
தூத்துக்குடி: மர்மமான முறையில் மரணமடைந்த சிவில் சப்ளைஸ் துறை அதிகாரியின் உலை வாங்க மறுத்து கடந்த நான்கு நாட்களாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகன். மீளவிட்டானில் உள்ள சிவில் சப்ளை குடோனில் தரக்கட்டுபாட்டு துணை ஆய்வாளராக வேலை பார்த்தார். கடந்த 7-ம் தேதி பணியில் இருந்தபோது விஷம் குடித்து விட்டதாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 11-ம் தேதி அன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்ததால்தான் முருகன் இறந்துள்ளார். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள முருகனின் உடலை வாங்க மறுக்கின்றனர்.
நேற்று மாலை கலெக்டர் பிரகாஷ் கார் முன்பு படுத்து முருகனின் உறவினர்கள் மறியல் செய்தனர். அவர்களிடம் கலெக்டர் பிரகாஷ் முருகனின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக கிடைத்த பிறகே மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், தனி அதிகாரியை நியமித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஆனால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 5 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.