தீயணைப்புப் படையில் செயின் பெர்னார்ட் வகை நாய் ரெமோ
சென்னை: தமிழ்நாடு தீயணைப்புப் படையில் மீட்புப் பணியில் ஈடுபடுத்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'செயின்ட் பெர்னார்ட்' வகை நாய் ஒன்றை வாங்கியிருப்பதாக அந்தத் துறையின் இயக்குநர் டிஜிபி ஆர். நடராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
இயற்கைச் சீற்றங்களில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்கத் தீயணைப்புப் படையினர் பல் யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் விபத்துகளின்போது கண்ணுக்குத் தெரியாத இடங்களில் மாட்டிக் கொள்பவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய் அடங்கிய இடர் மீட்பு அணி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அணியில் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக மோப்ப நாய் இடம் பெற்றுள்ளது.
இந்த பணிக்காக லேப்ரடார், டாபர்மேன், டால்மேஷன் வகை நாய்கள் 5 பயன்படுத்தப்படுகிறது. இவை தங்குவதற்கான வசதி செய்ய ரூ. 6 லட்சமும், பராமரிப்பதற்கு ரூ. 2 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அணியின் புது வரவு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'செயின்ட் பெர்னார்ட்' வகை நாய். பிறந்து 45 நாட்களே ஆன இதற்கு ரெமோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாய்க் குட்டியின் விலை ரூ. 1.5 லட்சம் ஆகும்.
ரெமோ தாம்பரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பிறகு நிலச்சரிவுக்கு பெயர்போன நீலகிரி மாவட்டத்தில் மீட்புப் பணியில் ஈடுபடும்.
ரெமோ தங்க குளிர்சாதன வசதியுடன் கூடிய பிரத்யேக வாகனம் வாங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்த நாய்க் குட்டியின் பராமரிப்பு மற்றும் உணவிற்கு ரூ. 2,000 ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications