சென்னை-நள்ளிரவில் பிளாட்பாரத்தில் கார் மோதி 2 பேர் பலி
சென்னை: சென்னையில் நள்ளிரவில் பிளாட்பாரத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் சிறுமி உட்பட இருவர் பலியாகினர்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்துக்கு பின்புறம் உள்ளது கங்கை கொண்டபுரம் குடியிருப்பு. இந்தப் பகுதியில் இரவு நேரத்தில்தான் தண்ணீர் வரும் என்பதால் நள்ளிரவில் அப் பகுதியினர் பிளாட்பாரத்தில் துணிகளை துவைப்பது வழக்கம்.
இன்று நள்ளிரவு 2.15 மணியளவில் கஜலட்சுமி (14), அவரது பாட்டி ராமலட்சுமி (62), ரீட்டா (56) ஆகியோர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தியாகராய நகரில் இருந்து ஜி.என். செட்டி ரோடு வழியாக படுவேகத்தில் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் திடீரென நிலை தடுமாறி அங்கிருந்த மூன்று ஆட்டோக்கள், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதிவிட்டு, பிளாட்பாரத்தில் ஏறி துணி துவைத்தவர்கள் மீது மோதியது.
இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், கஜலட்சுமி மற்றும் ரீட்டா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காரை ஓட்டி வந்த இருவரைப் பிடித்த அப் பகுதியினர் பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணையில், காரை ஓட்டி வந்தது கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த அபிநந்த ஜெயின் (18) என்றும், உடன் இருந்தது சிராக் (20) என்றும் தெரியவந்தது.
இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு பிபிஏ படித்து வருகின்றனர்.
தி.நகரில் உள்ள தங்கள் கல்லூரி நண்பரின் பிறந்தநாளையொட்டி மது பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு காரை வேகமாக ஓட்டி வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.