சத்துணவு-முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம்
சென்னை: முட்டை சாப்பிடாதவர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் வழங்குப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி, சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்துப் பேருரை ஆற்றிய முதல்வர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக இந்த பிரம்மாண்டமான நூலகத்தை திறந்து வைக்கும் இந்த நேரத்தில் - பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் - வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் 5 நாட்களிலும் வேக வைத்த முட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பினை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நோக்கில், தற்போது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்களில் சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதை, இனி வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் சத்துணவுடன் வேக வைத்த முட்டையை வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், முட்டை உண்ணாத மாணவ - மாணவியர்க்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி நேற்று (செப்.17) ஆணையிட்டுள்ளார்.
சத்துணவுடன் ஐந்து முட்டை வழங்கும் திட்டத்துடன் ஏற்கனவே, செவ்வாய்க்கிழமை 20 கிராம் வேகவைத்த கொண்டைக் கடலை அல்லது பச்சைப் பயறு, வெள்ளிக்கிழமை 20 கிராம் வேகவைத்த உருளைக் கிழங்கு ஆகியவைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த ஆணையின் காரணமாக 57 லட்சத்து 75 ஆயிரம் பள்ளி மாணவ - மாணவியர் பயன் பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு 125 கோடியே 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications