நாகர்கோவிலில் நாளை திமுக முப்பெரும் விழா-திருவனந்தபுரம் வழியாக செல்கிறார் கருணாநிதி
சென்னை: நாகர்கோவிலில் நாளை திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திருவனந்துபுரத்திற்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் செல்கிறார் முதல்வர் கருணாநிதி.
தி.மு.க. முப்பெரும் விழா, விருது வழங்கும் விழா நாளை மாலை 6 மணிக்கு நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் நடக்கிறது. இந்த விழாவில் திமுக தலைவர், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு திமுக அறக்கட்டளை சார்பில் மேல்நிலைப்பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நிதி மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந் தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நிதி மற்றும் சான்றிதழ்களையும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கம் ஆகியவற்றையும் வழங்குகிறார்.
இந்த ஆண்டுக்கான பெரியார் விருதை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும், அண்ணா விருதை செ.குப்புசாமிக்கும், பாரதிதாசன் விருதை ராஜம்ஜானுக்கும், கலைஞர் விருதை ஜி.எம்.ஷாவுக்கும் வழங்கி பேசுகிறார்.
திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான அன்பழகன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் சுரேஷ்ராஜன் வரவேற்கிறார்.
பொருளாளர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, தென் மண்டல அமைப்பு செயலாளர் மத்திய மந்திரி மு.க.அழகிரி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குண பாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.
விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் கருணாநிதி தனியார் விமானம் மூலம் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக நாகர்கோயில் சென்றடைகிறார்.