காஷ்மீருக்கு நாளை செல்கிறது அனைத்துக் கட்சிக் குழு
ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு நாளை அனைத்துக் கட்சிக் குழு விஜயம் செய்கிறது. இரண்டு நாள் பயணமாக செல்லும் இந்தக் குழுவினர், அங்கு நிலவும் உண்மை நிலையை ஆய்வு செய்யவுள்ளனர். பல்வேறு குழுக்களை சந்தித்துப் பேசவுள்ளனர்.
கடந்த 3 மாத காலமாக அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது காஷ்மீர். தினசரி ஒருவர் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. பற்றி எரிந்து கொண்டிருக்கும் காஷ்மீரில் அமைதியை கொண்டு வர என்ன செய்யலாம் என்பது குறித்து சமீபத்தில் பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தின் இறுதியில், காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாளை இக்குழு 2 நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறது. 38 பேர் கொண்ட இக்குழுவினர் காஷ்மீரின் உண்மை நிலையை நேரில் காணவுள்ளனர். பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இந்தக் குழுவில் இடம் பெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தற்போது இடம் பெறாது எனத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் குறை கூறி குழுவினரின் திட்டத்திலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக கூறியுள்ளது அக்கட்சி.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இக்குழுவுக்குத் தலைமை தாங்கி காஷ்மீர் வருகிறார் என்பது நினைவிருக்கலாம்..