மொரீஷியஸ் துணை ஜனாதிபதி ஏ.வி. செட்டியார் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை : மொரீஷியஸ் துணை குடியரசுத் தலைவர் அங்கிடி வீரய்யா செட்டியார் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மொரீஷியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி அங்கிடி வீரைய்யா செட்டியாரின் மறைவு குறித்து நானும் தமிழக மக்களும் செய்தியறிந்து மிகுந்த துயரடைந்தோம்.
மொரீஷியஸ் மீது மிகுந்த தேசபக்தி மிக்கவர் அவர். இந்தியாவின் உண்மையான நண்பராகவும் விளங்கினார். இந்திய-மொரிஷீயஸ் நாட்டின் நல்லுறவின் மேம்பாட்டுக்கு மிகுந்த அக்கரை காட்டியவர். குறிப்பாக மொரீஷியசுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள கூட்டுறவில் மிகுந்த கவனம் செலுத்தியவர் அங்கிடி வீரைய்யா செட்டியார்.
சென்னைக்கு அவர் வரும்போதெல்லாம் அவரை சந்திப்பதில் பெருமை அடைந்துள்ளேன். இரு நாட்டு மக்களிடையே அவர் கொண்டுள்ள நல்லுறவையும், நட்பின் ஆழத்தை அதிகரிக்கக் கூடிய அவரது அன்பையும் திரும்பிப் பார்க்கிறேன்.
இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அவர் மீது மிகுந்த மரியாதையையும் அன்பையும் வைத்துள்ளனர். அங்கிடி வீரைய்யா செட்டியாரின் மறைவு மூலம் இந்தியாவின் நல்ல நண்பரை, தமிழ் மற்றும் தமிழர்களின் மீது அதிக பாசம் கொண்டவரை இழந்துவிட்டோம். அவரின் குடும்பத்தினருக்கு, அந்நாட்டு மக்களுக்கும் எங்களின் இதயப்பூர்வமான அனுதாபத்தை தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார் முதல்வர்.