அயோத்தி தீர்ப்பை ஒத்திவைப்பது தொடர்பான வழக்கு-மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து
லக்னோ: அயோத்தி வழக்கின் தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர், தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். இதனால் தீர்ப்பு சர்ச்சையாகியுள்ளது.
மேலும் அயோத்திப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் மற்ற இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பைத் தள்ளி வைக்கத் தேவையில்லை என்று தெரிவித்ததால் பெரும்பான்மை அடிப்படையில், தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரிய மனு தள்ளுபடியாகி விட்டது.
மூன்று நீதிபதிகளில் ஒருவரான தரம் வீர் சர்மா கூறுகையில், அயோத்திப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண இன்னும் கூட வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பெஞ்ச் தனது தீர்ப்பை முடிவு செய்து அறிவித்தபோது தன்னை கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் நீதிபதி தரம் வீர் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அலகாபாத் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றுகோரி தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
செப்டம்பர் 24ம் தேதி அயோத்தி பிரச்சினை தொடர்பான 60 ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. அப்போது சர்ச்சைக்குரிய ராமர் ஜென்மபூமி-பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம், அங்கு ஏற்கனவே கோவில் கட்டப்பட்டிருந்ததா என்பது குறித்து தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்:
இதற்கிடையே, அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நாளை சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்ட மனுதாரரின் வக்கீல் ரமேச் சந்திர திரிபாதி இத்தகவலைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தீர்ப்பை ஒத்திவைக்க இன்னுமொரு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை சிறப்பு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.
பாஜக அவசர ஆலோசனை:
இந்த நிலையில், தீர்ப்பு குறித்து பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமையன்று அயோத்தி தீர்ப்பு வெளியாகிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் கட்சித் தலைவர் நிதின் கத்காரி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications