நான் எப்போதாவது பூக்கும் அரிய மலர் அல்ல-ராகுலை சீண்டி மமதா பேச்சு
நானூர் (மேற்கு வங்கம்): நான் எப்போதாவது பூக்கும் அபூர்வ மலர் அல்ல என்று கூறியுள்ளார் திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி.
இதன் மூலம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை அவர் மீண்டும் சீண்டியுள்ளார். ராகுல் காந்தி கூட்டுப் புழு போல இருக்கிறார். எப்போதாவதுதான் வெளியில் தலை காட்டுகிறார் என்று முன்பு விமர்சித்திருந்தார் மமதா. இந்த நிலையில் மீண்டும் அவரை மறைமுகமாக சீண்டியுள்ளார் மமதா.
மேற்கு வங்க மாநிலம் நானூர் என்ற இடத்தில் அவர் பேசுகையில், எப்போதாவது தான் சில பூக்கள் பூக்கும். அவை அபூர்வமாகத்தான் பூக்கும். சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள். எப்போதாவதுதான் அவர்களைப் பார்க்க முடிகிறது. அதுவும் தேர்தல் சமயத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது. தேர்தல் முடிந்தவுடன் மறைந்து போய் விடுகிறார்கள். ஆனால் நாம் அப்படி அல்ல.
தங்கப் படுக்கை மீது நாம் படுத்தபடி அரசியல் செய்யவில்லை. அடி மட்ட மக்களுடன் இருந்து அரசியல் செய்து வருகிறோம். நான் பயணிக்கும் சாலை குறித்த அத்தனை விவரங்களும் எனது விரல் நுனியில் இருக்கும். அதன் தன்மை என்ன என்பது எனக்குத் தெரியும். ஆண்டு முழுவதும் நான் மக்களுடன்தான் இருக்கிறேன். மக்களின் பிரச்சினைகள் எனக்குத் தெரியும். அவர்களுக்கும் என்னைத் தெரியும். அவர்கள் பேசும் மொழி எனக்குப் புரியும் என்றார் மமதா.
சமீபத்தில் கூட்டணி தொடர்பாக திரினமூல் காங்கிரஸ் நடந்து கொள்ளும் முறையை கடுமையாக விமர்சித்திருந்தார் ராகுல். மமதா மீது அன்பு வைத்துள்ளேன். அதற்காக அவருக்கு அடிமை போல இருக்க முடியாது. கெளரவம் இருந்தால்தான் கூட்டணி அமைக்க முடியும். மரியாதை இல்லாத இடத்தில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications