கசாப் அப்பீல் மனு தாக்கல் செய்யும் வரை காத்திருக்க முடியாது-மும்பை உயர்நீதிமன்றம்
மும்பை: மரண தண்டனையை எதிர்த்து அஜ்மல் கசாப் அப்பீல் மனு தாக்கல் செய்யும் வரை காத்திருக்க முடியாது. அக்டோபர் 11 அல்லது 18ம் தேதி மரண் தண்டனையை உறுதி செய்யும் வாதம் தொடங்கும் என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மும்பை தீவிரவாத வழக்கில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்யப் போவதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை செய்யவில்லை.
குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி, விசாரணை நீதிமன்றத்தில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். இதற்கு வசதியாக தனிக் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பு உயர்நீதிமன்றத்திற்காக தானாகவே போய் விட்டது.
இந்த நிலையில், மரண தண்டனையை உறுதி செய்வதற்கான விசாரணை நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான பெஞ்சு முன்பாக நேற்று நடந்தது. அப்போது கசாப்பின் வக்கீல் பர்ஹானா ஷாவிடம் நீதிபதி ரஞ்சனா தேசாய் கூறுகையில்,
அப்பீல் செய்வதற்கான 60 நாள் அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது. மரண தண்டனையை உறுதி செய்வதற்கான விசாரணையை வரும் அக்டோபர் 11 அல்லது 18-ந் தேதி தொடங்கி தினந்தோறும் நடத்துவோம். இந்த காலவெளிக்குள் கசாப் அப்பீல் செய்யலாம். இனியும் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.