அயோத்தி தீர்ப்பை தள்ளி வைக்க கோரும் மனு-விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மேலும், இது சிவில் வழக்கு என்பதால்வேறு கோர்ட்டை (பெஞ்ச்சை) நாடுமாறும் அது கூறியுள்ளது. இதன் காரணமாக, அயோத்தி வழக்கின் தீர்ப்பு திட்டமிட்டபடி செப்டம்பர் 24ம் தேதி வெளியாவதற்கு தடை விதிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரமேஷ் சந்திர திரிபாதி என்ற தொழிலதிபர் இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட மனுவை விசாரித்த 3 நீதிபதிகளில் ஒருவர், தீர்ப்பைத் தள்ளிப்போட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்தை மற்ற இரு நீதிபதிகளும் நிராகரித்துள்ளனர்.
டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்தநிலையில் தீர்ப்பு வெளியானால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
அயோத்தி தீர்ப்பால் மத ரீதியில் பெரும் பதட்டம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதை அடக்க பெருமளவிலான படையினர் தேவைப்படுவர். அதை உடனடியாக திரட்டுவது சாத்தியமில்லாதது.
எனவே தீர்ப்பை தள்ளிப் போட உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.மேலும் இந்த விவகாரத்தை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று பிற்பகலில் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், ஏ.கே.பட்நாயக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கபீர் கூறுகையில், இந்த மனு சிவில் மனுவாகும். எனவே இதை இங்கு விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. வேறு கோர்ட்டை மனுதாரர் அணுகலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
இதன் மூலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு (தீர்ப்பை ஒத்திவைக்க முடியாது என்ற தீர்ப்புக்கு) தடை விதிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.