தனியார் பள்ளி கட்டண உயர்வு விவகாரத்தில் முதல்வர் யார் பக்கம் ?- சிபிஎம்
விருதுநகர்: தனியார் பள்ளி கட்டண உயர்வு விகாரத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள், மாணவர்கள் பக்கமா ? அல்லது தனியார் பள்ளி நிர்வாகங்களின் பக்கமா என்பதை முதல்வர் கருணாநிதி உடனே தெளிவுபடுத்த வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விருதுநகர் வந்த ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தனியார் பள்ளிகளின் கட்டணம் குறித்து நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைக்கு உயர்நீதிமன்றத்தில் தனியார் பள்ளி முதலாளிகள் செப்டம்பர் 14 ம் தேதி தடை உத்தரவு பெற்று விட்டனர்.
ஆனால் இதுவரை தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. இந்த தடை உத்தரவுக்குப் பிறகு பல பள்ளிகளில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் மேல் முறையீட்டை தமிழக அரசு தாமதப்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேதினத்தன்று விடுமுறை விடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறிய நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்து அந்த உத்தரவுக்கு அன்று மாலையே தடை உத்தரவு பெற்றது தமிழக அரசு. அந்த வேகத்தை இந்த விஷயத்தில் காட்டாதது ஏன் ?
இந்த வழக்கில் நவம்பர் 29 ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலத்திற்குள் ஏற்கெனவே கோவிந்தராஜன் குழு பரிந்துரையை ஏற்ற தனியார் பள்ளி நிறுவனங்கள் கூட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அபாயம் உள்ளது.
தனியார் பள்ளிகளில் சுமார் 1 கோடி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்து உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள், மாணவர்கள் பக்கமா ? அல்லது பள்ளி நிர்வாகத்தின் பக்கமா ? என்பதை முதல்வர் கருணாநிதி தெளிவு படுத்தவேண்டும் என்று கேட்டுள்ளார்.