போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க அரசு 2 வார கெடு!
சென்னை: தமிழ் நாட்டில் போலி குடும்ப அட்டைகள் புழகத்தில் உள்ளது. இதனால் அரசுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதையடுத்து போலி ரேஷன் அட்டைகளை 2 வாரத்திற்குள் உணவுப் பொருள் வழங்கல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
அறிவித்தபடி ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் எந்த வித பற்றாக்குறையும் இன்றி பொருட்களை விநியோகம் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் அதிகளவில் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவற்றை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
போலி குடும்ப அட்டைகளை பயன்படுத்துபவர்கள் அவற்றை 2 வாரத்திற்குள் அந்தந்த பகுதியில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.