For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா-இன்று துவக்கம்

By Chakra
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் இன்று தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா 5 நாட்கள் நடக்கிறது.

இன்று மாலை 5.30 மணிக்கு பெரிய கோவில் வளாகத்தில் தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் கலை நிகழ்ச்சியும், 6 மணிக்கு சீர்காழி சிவசிதம்பரத்தின் இசை நிகழ்ச்சியும், 6.45 மணிக்கு திருநங்கை நர்த்தகி நடராஜின் நடன நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இன்று மாலை தஞ்சை சங்கமம் நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சி தஞ்சை சிவகங்கை பூங்கா, ராஜராஜன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கரந்தையில் நடைபெறும். இது 3 நாட்களுக்கு மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 வரை நடைபெறும். இதில் சுமார் 1000 கலைஞர்கள் தங்கள் திறமைகளை அரங்கேற்றுகின்றனர்.

நாளை மாலை 5.30 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் கலை நிகழ்ச்சியும், 6 மணிக்கு டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சியும், 8 மணிக்கு நடனக் கலைஞர் ஜாகிர் உசேன் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை வெள்ளிக்கிழமை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

காலை 10 மணிக்கு இந்திய பெருமைக்கு தஞ்சையின் பங்களிப்பு என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள கரிகாற்சோழன் கலையரங்கத்தில் ஆய்வரங்கம் நடைபெறவிருக்கிறது. இதை தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர் பொன்முடி தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சோழர்கால ஓவியங்கள் என்ற நூலை வெளியிடுகிறார். முதல்வரின் உரைக்குப் பிறகு 5 அமர்வுகளாக நடக்கும் ஆய்வரங்கில் பல் துறை அறிஞர்கள் பேசுகின்றனர்.

அன்று மாலை 5.30 மணிக்கு அலங்காநல்லூர் ஆறுமுகம் குழுவினரின் பறையாட்டமும், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் கருவி இசையும், 6.45 மணிக்கு அருணா சாய்ராமின் இசை நிகழ்ச்சியும் பெரியகோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.

சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பெரிய கோவில் வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் அவ்வை நடராஜன், குடவாயில் பாலசுப்பிரமணியன், நடன காசிநாதன், சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் பேசுகின்றனர்.

அன்று மாலை 5.30 மணிக்கு திருக்குவளை சகோதரிகளின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து திருமுறை ஓதுதல் மற்றும் 1000 நடனகலைஞர்கள் பங்கேற்கும் பத்மாசுப்பிரமணியத்தின் நாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

இரவு 9 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் ராஜராஜசோழன் வரலாற்று நாடகத்தை புகழேந்தி, கலைவாணன் குழுவினர் நடத்துகின்றனர்.

கொண்டாட்டத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பெரிய கோவில் வளாகத்தில் களிமேடு கிராமத்தினர் வழங்கும் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு விழா மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் முதலமைச்சர் கருணாநிதி நிறைவு விழாப் பேருரை ஆற்றுகிறார்.

நிகழ்ச்சியில் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு 10 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது.

இது தவிர தஞ்சை பெரியகோவில், ராஜராஜசோழன் புகைப்படம் அடங்கிய அஞ்சல் தலையும் வெளியிடப்படுகிறது.

இந்த விழாவையொட்டி தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விழாவை முன்னிட்டு தஞ்சை வளர்ச்சிப் பணிகளுக்காக அரசு ரூ. 25 கோடி வழங்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X