எதியூரப்பா அமைச்சரவையில் மீண்டும் ஷோபா கரந்த்லஜே : புதிதாக 6 அமைச்சர்கள் பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

Shobha with Yeddiyurappa
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பி. எஸ். எதியூரப்பா தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். ரெட்டி சகோதரர்களின் அனத்தலால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட தனக்கு மிகவும் நெருக்கமான ஷோபாவை மீண்டும் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக அமைச்சரவையை மாற்றியமைப்பதற்காக, விளையாட்டுத்துறை அமைச்சர் கூளிகட்டி சேகர், உயர் கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி, முதியோர் நலத்துறை அமைச்சர் சிவன்ன கெளடா நாயக் ஆகியோரை பதவி விலகுமாறு எதியூரப்பா உத்தரவிட்டார்.

ஆனால், கூளிகட்டி சேகர் தன்னை பதவி நீக்கம் செய்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார். அதே போல மற்ற இருவரும் ராஜினாமா செய்ய மறுத்தனர்.

இதையடுத்து டெல்லிக்குச் சென்ற எதியூரப்பா அங்கு பாஜக மேலிடத் தலைவர்களை சந்தி்த்து நிலைமையை விளக்கினார். அவர் எந்த முடிவையும் எடுக்கலாம் என்று சுதந்திரம் தரப்பட்டது.

இதையடுத்து மூன்று அமைச்சர்களையும் எதியூரப்பா பதவி நீக்கம் செய்துவிட்டு புதிதாக 6 அமைச்சர்களை நியமித்துள்ளார்.

இன்று காலை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஏ. நாராயணசுவாமி, சி. ஹெச். விஜயஷங்கர், சி. சி. பாட்டில், ஷோபா கரந்த்லஜே, வி. சோமன்னா, எஸ். ஏ. ராமதாஸ் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஆளுநர் ஹெச். ஆர். பரத்வாஜ் அவர்களுக்குப் பதவிப் பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எதியூரப்பா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் அனந்த்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்.

பதவியேற்ற அமைச்சர்களில் ஏ. நாராயணசுவாமி, சி. சி. பாட்டில், ஷோபா, ராமதாஸ் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மேலும், விஜயஷங்கர், சோமன்னா ஆகியோர் சட்ட மேலவை உறுப்பினர்கள் ஆவர்.

எதியூரப்பாவின் நம்பிக்கைக்குரிய ஷோபா 11 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கேபினட் அமைச்சர் ஆகுகிறார். ரெட்டி சகோதரர்களின் வற்புறுத்தலால் ஷோபா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் ரெட்டி சகோதரர்களே தற்போது சுரங்க விவகாரத்தில் பெரும் சிக்கலில் தவித்து வருவதால், அதைப் பயன்படுத்தி மறுபடியும் ஷோபாவை உள்ளே கொண்டு வந்து விட்டார் எதியூரப்பா.

கட்சி எடுத்த இந்த முடிவில் எங்களுக்கு மகிழ்ச்சி. கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அதன்படி நடப்போம் என்று ஷோபா மீண்டும் சேர்க்கப்பட்டது குறித்து ஜனார்த்தன ரெட்டி நிருபர்களிடம் கூறினார்.

ஆனால், ரெட்டி இவ்வாறு வெளியில் கூறினாலும் தங்களது ஆதரவாளர்களான இந்த மூவரும் நீக்கப்பட்டது குறித்து ரெட்டி சகோதரர்கள் பெல்லாரியில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டாரும் கலந்து கொண்டார்.

பதவி கிடைக்காத 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா:

இதற்கிடையே சி.டி. ரவி (சிக்மகளூர் தொகுதி), ரஞ்சன் (மடிகேரி தொகுதி) ஆகிய 2 பாஜக எம்எல்ஏக்களும் நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இவர்கள் இருவரும் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்தனர். ஆனால், எதியூரப்பா பதவி தர மறுத்துவிட்டதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

3 அமைச்சர்கள் நீக்கப்பட்டது, அவர்களுக்கு ஆதரவாக கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீண்டும் போர்க் கொடி உயர்த்தியிருப்பது, தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருப்பது ஆகியவை கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கர்நாடக பாஜக அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+